சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்ததால் நேற்று பவுன் ரூ.42 ஆயிரத்தை தாண்டியது. இந்தநிலையில் நகை பிரியர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் இன்று தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.184 குறைந்துள்ளது. நேற்று பவுன் ரூ.42,080க்கு விற்பனை ஆனது. இன்று ரூ.41,896-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.23 குறைந்து ரூ.5,260-ல் இருந்து ரூ.5,237ஆக விற்கப்படுகிறது.
இதே போல் வெள்ளி விலையும் குறைந்து இருக்கிறது. கிராம் ரூ.74.90-ல் இருந்து ரூ.73.70 ஆகவும், கிலோ ரூ.74,900-ல் இருந்து ரூ.73,700ஆகவும் குறைந்து இருக்கிறது.
பொதுவாக, தங்க நகையின் விலை, 22 அல்லது 18 காரட் தங்கத்தின் சந்தை மதிப்பு, செய்கூலி மற்றும் ஜிஎஸ்டி வரியை உள்ளடக்கும். செய்கூலி, நகைக்கு நகை வேறுபடும். நகையில் இருக்கும் டிசைன்களைப் பொறுத்து செய்கூலியும், சேதாரமும் மாறுபடும். அனைத்து நகைக்கடைகளிலும் தங்கத்தின் விலை ஒரே மாதிரியாக இருந்தாலும்,செய்கூலி, சேதாரத்தின் விகிதம் வேறுபட்டிருக்கும். இதனால், வாடிக்கையாளர்கள் நகை கடைகளில் பேரம் பேசினால், செய்கூலி, சேதாரத்தின் விலையைக் குறைத்துக் கேட்கலாம். தங்கத்தின் மீது 3% ஜிஎஸ்டியும் செய்கூலி மீது கூடுதலாக 5% ஜிஎஸ்டி வரியும் வதிக்கப்படுகிறது. முக்கியமாக, கல் பதித்த நகைகள் என்றால், கல்லின் எடை நகையின் மொத்த எடையிலிருந்து கழிக்கப்படும். கல்லின் மதிப்பு தனியாகச் சேர்க்கப்படும். பொதுவாக தங்கம் விலை சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை என இடங்களுக்கு தகுந்தபடி விலையில் மாறுபாடு இருக்கும். அதன் தரம் மற்றும், இறக்குமதி வரி போன்ற பல்வேறு காரணங்களால் இந்த மாறுபாடு இருக்கும். தற்போதைய நிலையில் இறக்குமதி சுங்க வரி 10 சதவிகிதமாக இருக்கிறது.