தமிழ்நாட்டில் விவசாயம், குடிசை வீடுகள், விசைத்தறிகள் மற்றும் வீடுகளுக்கு மின் வாரியம் சார்பில் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. மானியம் விலையிலும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் 2811 மின் அலுவலகங்களில் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் சிறப்பு முகாம்கள் மேற்கொள்ளப்பட்டன. என்றாலும் டிசம்பர் 31-ந்தேதி வரை சுமார் 50 சதவீதம் பேர்தான் ஆதார் எண்ணை இணைத்து இருந்தனர்.
இதையடுத்து ஆதார் எண்ணை இணைப்பதற்கு வசதியாக அதற்கான கால அவகாசம் இந்த மாதம் அதாவது ஜனவரி 31- ந் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது. மின் நுகர்வோர்கள் மின் வாரிய இணையதளத்தை பயன்படுத்தியும் ஆதார் எண்ணை இணைக்கலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழக அரசு வழங்கிய கால அவகாசம் நீட்டிப்பு நிறைவு பெறுவதற்கு இன்னும் 2 வாரங்கள் அவகாசம் உள்ளன. நேற்று வரை மின் இணைப்பு எண்ணுடன் 1.96 கோடி பேர் தங்களது ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர். இன்னும் சுமார் 70 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைக்க வேண்டி உள்ளது.
அவர்களையும் பட்டியலில் கொண்டு வருவதற்காக அவர்களது செல்போன் எண்ணுக்கு மின் வாரிய ஊழியர்கள் மெசேஜ் அனுப்பி வருகிறார்கள். இதை தவிர மின் நுகர்வோர்களை போன் மூலமாகவும் தொடர்பு கொண்டு ஆதார் எண்ணை இணைக்குமாறு வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் ஆதார் எண் இணைத்தவர்களில் சிலரது தகவல்கள் அழிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டதும் பலரும் ஆன்லைன் மூலமாக ஆதார் எண்ணை இணைத்தனர்.